வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 டிசம்பர், 2007

வாழ்வை ரசியுங்கள்

நேற்று கவப்பேரரசு வைரமுத்து அவர்களின் திருத்தி எழுதிய தீர்ப்புகள் புத்தக்த்தை படித்துக் கொண்டிருந்தேன். அதில் அந்தி என்ற தலைப்பில் வந்த ஒரு கவிதைப் படித்தேன், மிக அருமையாக இருந்து. அக்கவிதை இதுவே,

அந்தி

யாரங்கே?
ராத்திரி வரப்போகும்
ராச குமாரிக்கு
மேற்கு அம்மியிலே
மஞ்சள் அரைப்பது யார்?
இத்தனை நிறக்கோலம்
ஏனங்கே?

ஓ!
அது
இரவின் வாசலென்றா
இத்தனை அலங்காரம்?

என்ன அது?
தீயில் அங்கே
தேன்வடிகிறதா?

அங்கே
வழிந்தோடுவதெல்லாம்
வானத்துக்கு
ஒரு
பகலை பலிகொடுத்த
ரத்தமா?

இத்தனை
வர்ணப் புடவைகளைக்
கலைத்துப் போட்டும்.....
கடைசியில்
இரவு
கறுப்பைத்தானே
கட்டிக் கொள்கிறது?

நீலத் திரையில்
யாரோ
வரையக் கொண்டுவந்த
வர்ணக் கிண்ணம் -
சூரியனில் தடுக்கிச்
சிந்தி விட்டது!
ஆனால்.....
சிந்தியதெல்லாம்
சித்திரமானது!

புரிகிறது!
மரணப் படுக்கையில்
பகல்
புன்னகைக்கிறதோ?

விடைபெறும் சூரியன்
உள்ளங் கையை
உரக்க அசைக்கையில்..
தங்க மோதி்ரங்கள்
தகதகக்கின்றன்!

என் கிராமத்து சோதரி
ஒரு
கிழிந்த பாவாடைக்காரி
கேட்கிறாள்:

"இந்த வானமும் ஏன்
என்னைப் போல்
ஒட்டுப் போட்டு ஆடை
உடுத்துகிறது?"
- வைரமுத்து

இக்கவிதயை படித்தப்பின் மனதில் ஒரு சொல்ல முடியாத இன்பம். அதுவும் "இத்தனை வர்ணப் புடவைகளைக் கலைத்துப் போட்டும்..... கடைசியில் இரவு கறுப்பைத்தானே கட்டிக் கொள்கிறது?" என்ற வாக்கியத்தைப் படித்தவுடன வந்த பரவசம் இருக்கிறதே, எவ்வளவு தான் சோம பானம் அருந்தினாலும் இந்தப் பரவசத்தை அடைவது கடினம்.

தினசரி நடக்கும் ஒரு சம்பவத்தை, இப்படி பார்க்கும் கவிஞருக்கு எத்துனை கற்பனை வளம் இருக்கும் என்ற நினைப்பே, கவிஞரின் மீது எனக்கு அளவில்லா பொறாமையைத் தருகிறது.

" இந்த வானமும் ஏன் என்னைப் போல் ஒட்டுப் போட்டு ஆடை உடுத்துகிறது?", என்ற வாக்கியத்தின் முலம் சமுக பிரச்சனை ஒன்றை மிக நயமாக கூறி, நம்மை களிக்க செய்தது மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைக்கிறார்.

சற்றே சிந்தியுங்கள், இந்த தகவல் தொழிற்நுட்ப காலத்தில் அதுவும் இணையமும், தொலைக்காட்ச்சியும் வந்த பின், எப்பொழுதெல்லாம் எவ்வளவு நேரம் சிந்திக்கிறோம்?

மிக சொற்பமான நேரமே அல்லவா?

ஒரு மனிதனின் வாழ்க்கை மேம்பட வேண்டுமானால், அவன் சிந்திக்க வேண்டும்? சிந்தனை எப்பொழுது எற்படும்?

நல்ல புத்தகத்தை படித்தால் மட்டுமா?

இல்லவே இல்லை, மனித மனம் இன்பமாக இருந்தாலே போதும், சிந்திக்க ஆரம்பித்து விடவோம்.

மனிதனுக்கு இன்பம் வர என்ன செய்ய வேண்டும், வாழ்க்கையை ரசிக்க வேண்டும். தயவு கூர்ந்து வெள்ளி திரையையும், சின்னத் திரையையும் மட்டுமே பார்காதீர்கள். அவை பொழுதுப் போக்கு சாதனங்கள்.

பொழுதை சிறிதளவேனும் நன்றாக பயன் படுத்துங்கள். நல்ல புத்தகங்கள் படியுங்கள், நல்ல பாடல்கள் கேளுங்கள். ஓவியம் வரைய ஆசையா, வரையுங்கள். இயற்கையை பருக வேண்டுமா? பூங்காவிற்கு செல்லுங்கள், கடற்கரைக்கு செல்லுங்கள்.

வாழ்க்கையில் ரசிக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கிறது, அவை நம்மைச் சுற்றி இருக்கிறது, நம் கண்களுக்குத் தான் தெரியவில்லை.

நான் வாழ்க்கையை அனுஅனுவாக ரசிக்கத் தொடங்கியது கல்லூரியில் தான், அதற்கு ஒரு முக்கிய காரணம் எனது தோழன் கனிப்பாண்டியன்.

பயனங்கள் முடிவதில்லை திரைப்படத்தில் இளைய நிலா என்றொரு பாடல், பல தடவை எல்லாரும் கேட்டிருப்போம். என் இதயத்தின் ராஜா, இளையராஜா மிக அருமையாக இசை அமைத்திருப்பார், அந்த இசையில் மயங்கி பாடல் வரிகளை, கனி சுட்டிகாட்டும் முன் ஒரு முறை கூட முழுதாகக் கேட்டதில்லை. அதில் ஒரு வரி வரும்
"முகிலினங்கள் அலைகிறதே,
முகவரிகள் தொலைந்தனவோ,
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ, அது மழையோ",
இதைக் கேட்டப் பொழுது, என் வாழ்வில் ஒரு எல்லையில்லா பரவசத்தை அடைந்தேன், இன்றளவும் அப்பாடலை கேட்கும் பொழுதும் அதே பரவசம் தான். (கனிக்கு நன்றி).

சில மாதங்களுக்கு முன் Ratatouille என்ற ஒரு ஆங்கில படம் வந்ததது, உணவை எவ்வாறு ரசிக்க வேண்டும் என்று மிக அழகாகச் சொல்லி இருந்தார்கள், முடிந்தால் அப்படத்தைப் பாருங்கள்.

வாழ்க்கையை ரசியுங்கள், ரசித்தால் இன்பம் வரும். இன்பம் வந்தால் சிந்திப்போம், சிந்தித்தாத்தால் மனிதன் மேன்படுவான். இந்தியா அல்ல, உலகமே பூஞ்சோலையாக மாறும்.